top of page

சந்திரயான் மூணு!

Updated: Aug 31, 2023

மூன்றாம் நாளுக்குப் பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும். பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

ஆதியாகமம் 1:14‭-‬18


சந்திரன், கடவுள் படைத்த படைப்புகளில் ஒன்றாகும். பெரிய சுடராகிய சூரியனையும் மற்ற நட்சத்திரங்களையும் படைத்த நாளிலே கடவுள் இந்த சிறிய சுடராகிய நிலாவையும் சிருஷ்டித்தார். இது அம்புலி என்றும் திங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் படைக்கப் பட்டவைகள்.


மனுஷர் ஞாயிறு என்கிற சூரியனிலிருந்து தொடங்கி வார நாட்களுக்கு திங்கள் (சந்திரன்), செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி, சனி என்று பெயரிட்டார்கள். சூரிய கிரகணத்தன்று பகலிலேயே சூரியன் காணாமல் போவதால் மதியற்ற மனுஷர் சூரியனை ஒரு சர்ப்பம் விழுங்குவதாக எண்ணி, அந்த சர்ப்பத்துக்கு இராகு என்று பெயரிட்டார்கள். அதுபோல, சந்திரனை விழுங்குவதாக சொல்லப்படும் சர்ப்பத்துக்கு கேது என்று பெயரிட்டார்கள். இப்படி வந்ததுதான் நவக்ரஹ வழிபாடு.


ஆகஸ்ட் 2023ல் ISRO சந்திரயானை (நிலவு வாகனம்) வெற்றிகரமாக செலுத்தியதை, (விக்ரம் லேண்டர் மூலமாக பிரக்யான் என்ற ரோவரை ஊரவிட்டது வரை) பாராட்டி நம்முடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்த நொடி மிக விசேஷமானது. இந்திய புராணங்கள் பொய் என்றும் இவைகளில் விவரிக்கப்பட்ட சந்திரன் வெறும் கட்களாலும் குன்றும் குழிகளாலும் நிரம்பின ஒரு உயிரற்ற ஒரு கோள்தான், கடவுள் அல்லவே அல்ல என்றும் அதைக் கும்பிடுபவர்களாலேயே நிரூபிக்கப்பட்ட நொடிப்பொழுது தான் அது. இவைகளுக்கு ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுவதை ஊர்ஜிதப்படுத்திய நொடிப்பொழுதே அது. இவர் பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது உண்மையே என்பதையும் அங்கீகரித்த நொடிப்பொழுதாக்கும் அது.(ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் 1969லேயே (1971 வரை இன்னும் பத்துபேர்) சந்திரனின் முகத்தில் மிதித்துவிட்டார்களோ?). செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யானை அனுப்பி, அதையும் ஒரு கோள்தான் என்று உலகுக்கு காட்டிய நாம், சூரிய பகவானும் ஒரு சிருஷ்டி தான் என்று நிரூபிக்க ஆதித்தியா - L1 வேறு இந்த வருடம் செப்டம்பரில் 3ல் அனுப்புகிறோம். அப்படியானால் சூரிய நமஸ்காரமும் நவக்ரஹ பூஜையும் மதியீனம்தான் என்று இந்தியர்கள் நாமே உலகுக்கு உரக்க உரைக்கிறோம் அல்லவா?


(மேற்சொன்ன சில காரியங்களை தன்னுடைய ஒரு வீடியோவில் விவரித்த சகோ.சாலமன், தியோஸ் காஸ்பல் ஹால், திருப்பூர், அவர்களுக்கு நன்றி)


சிருஷ்டிகராகிய இவரை விட்டுவிட்டு இந்தக் கடவுள் படைத்த சுடர்களையும் கோளங்களையும் பகவானாக தேவனாக சுவாமியாக வணங்கும் மனுஷரைக் கண்டால் கடவுளுக்கு நம்மீது பரிதாபம் வருவதைவிட கோபம் வராதா? உக்கிர கோபம் வருகிறதாமே!


எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது நான்

விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். ஐயோ!


திங்கள் என்றால் மாதம் என்றும் பொருள் உண்டு. ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடைப்பட்ட முப்பது நாட்களே ஒரு மாதம். மூன் moon என்பதிலிருந்துதான் மந்த் month என்ற வார்த்தை உண்டாயிற்று. அமாவாசைக்கு new moon என்று சொல்லுவார்கள்.


சந்திரன் உதிக்கும் நேரமுதல் அடுத்து மறுபடியும் உதிக்கும் நேரம்வரை உள்ள காலம் ஒரு நாள். இப்பொழுது இது ஏறக்குறைய இருபத்திநான்கு மணிநேரமாகும்.


பன்னிரண்டு மாதங்கள் கொண்ட காலமே ஒரு வருடம். பூமி சூரியனைச்சுற்றி வரும்போது, ஒரு மாதத்திற்கு ஒரு இராசியாக பன்னிரண்டு இராசிகளுக்குள் சூரியன் புகுந்து பெயர்ந்து வருவதுபோல் பூமியிலிருந்து தோன்றும். பூமியிலிருந்து பார்க்கும்போது குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி போன்றவை திரும்பத் திரும்ப வருவதன் காரணமும் இதுவே.


நட்சத்திரங்களையும் சந்திரனையும் காலம்காலமாக வணங்கும் வழக்கம் மனிதர் மத்தியில் உண்டு. (எகிப்தின் நட்சத்திரக் கடவுளாகிய ஆறுமுகனை இஸ்ரவேலரும் வணங்கினார்கள். இது இன்று Star of David என்று அவர்களுடைய கொடியில் வைக்கப்பட்டுள்ளது). சசி / ஷஷி என்றால் சந்திரன்தான்.


இவைகளே தங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை தீர்மானிக்கும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். இதைச் சார்ந்த சாதகம்/ஜாதகம் எழுதி மொட்டை போடுவது, காது குத்துவது, பெயர் வைப்பது, வரன் பார்ப்பது, தாலி கட்டுவது, இறுதி மரியாதை செய்வதுகூட தீர்மானிக்கப்படுவது இந்த நட்சத்திரங்களையும் சந்திரனையும் சார்ந்துதான். இந்த பிறைச்சந்திரனைச் சார்ந்து வாழும் ஒரு பெரும் திரள் மக்கள் பூமியில் உண்டு. வேதத்தில் சொல்லப்பட்டபடி இவர்கள் யாவரும் மெய்தேவனுக்குப் பகைஞரே. அந்தகாரத்தின் இராஜ்ஜியத்துக்கு உரியவர்களே. தேவனுடைய எதிராளிக்கு தங்களை எழுதிக்கொடுத்துவிட்டவர்களே.


பூமியில் மனிதர் வாழத்தொடங்கிய காலம் முதல் சிருஷ்டிகராகிய மெய்தேவனைப்பற்றிக்கொண்டவர்கள் விசுவாச சந்ததி ஆவார்கள். இவர்கள் தங்கள் தேவனைத் தவிற வேறு யாரையும் எதையும் பணிந்து கொள்ளாதவர்கள். தங்கள் பாவங்களுக்கு பரிகாரமாக கடவுளே மனுஷனாக வந்து இரத்தம் சிந்தி தண்டனையை ஏற்றுக் கொண்டார் என்று விசுவாசிப்பவர்கள். பாவத்தின் நிமித்தம் ஏற்பட்ட நிர்வாணத்தை மறைக்க கடவுள் தம்முடைய நீதியை தங்களுக்கு உடுத்துவித்துள்ளார் என்று நம்புபவர்கள். இவர்கள் கடவுளுக்கு விசேஷமானவர்கள்.

இவர்களைக்குறித்து கடவுள் ஒரு விசேஷ நோக்கம் கொண்டிருக்கிறார். இப்பூமியில் சம்பவிக்கும் யாவையும் இவர்களைச்சுற்றிதான் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.


வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேஷம் என்னும் கடைசி புத்தகத்தில் இவர்களைக் குறித்து சொல்லப்படிருப்பது இதோ…


அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.


ஒளி என்னும் ஆடையை உடுத்தியிருக்கும் இப்பெண்தான் தேவனுடைய மக்களுக்கு அடையாளமாக சொல்லப்பட்டவள். ஜோதியாகிய கடவுளே இவளுடைய பாவமாகிய நிர்வாணத்தை மூடியவர். ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு மற்றும் அவர்களுக்குப் பின் வந்த பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்து வந்த விசுவாச சந்ததியில் பிறந்த இயேசு என்னும் இரட்சகர் மூலமாக முடிசூடப்பட்டவர்கள் இவர்கள். இவளுடைய பாதங்களின் கீழ்தான் சந்திரன் இருப்பதாகக் காண்பித்தார் கடவுள்.


இயேசுகிறிஸ்து சிலுவையில் மரணத்தை ஜெயித்தார். சாத்தானின் தலையை தம்முடைய காலால் நசுக்கிப்போட்டார். இவருடைய உயிர்த்தெழுதலே பாதாளத்தை இவர் வெற்றிசிறந்தார் என்று உலகுக்கு உரக்க அறிவிக்கும் நிகழ்வு. (ம்ருத்யோமா அம்ரிதம் கமய). இவரைப் பற்றிக்கொண்ட யாவரும் சீக்கிரம் ஒரு நாள் தங்கள் காலின் கீழ் சாத்தானை நசுக்கிப்போடுவார்கள்.


சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.


இயேசுகிறிஸ்து தம்முடைய வாக்கின்படியே தம்முடைய விசுவாசிகளை தம்மோடு சேர்த்துக் கொள்ள சீக்கிரம் வருகிறார். கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.


எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? என்ற வெற்றி முழக்கம் கேட்கும் நாள் தூரத்தில் இல்லை.


இயேுகிறிஸ்து முன்னுறைத்த படி, சூரியன் ஒளி கொடாமலும் சந்திரன் இரத்தமாகவும் மாறும் நாளொன்று சீக்கிரம் வருகிறது.


கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. அநேகருக்கு அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? .


விசுவாசிகளுக்கோ அந்த நாள் சந்திரன் நம்முடைய பாதங்களின்கீழ் ஆக்கப்படும் நாள். ஆம்ஸ்ட்ராங் முழங்கினதை விட மகா கெம்பீரமான முழக்கமாக இருக்கும் நாள். சாத்தானின் தலை நம்முடைய காலின்கீழ் மிதிக்கப்படும் நாள்.


நீங்கள் இந்த நாளுக்காக காத்திருக்கிறீர்களா? இல்லை…?


(கள்ளத் தீர்க்கதரிசியாகிய USA எழுத்தின்படி சந்திரனில் கால் பதித்தாலும், வெளிப்படுத்தின விசேஷம் ஆவிக்குரிய விதத்தில் வியக்கியானப்படுத்த வேண்டிய புத்தகம் என்று கர்த்தரே முதல் அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார். இவைகளை எழுத்தின்படி எடுத்துக்கொள்ள நம்மை முடுக்கிவிடுவது சாத்தானுடைய தந்திரமே. பிசாசினுடைய கூட்டமாகிய அந்திக் கிறிஸ்துக்களால் வஞ்சிக்கப்பட்டு அவர்களுக்குப் பணிந்து போகாதிருங்கள்).

66 views0 comments

Comments


bottom of page