அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்ப்பதுதான் கடவுளுடைய நித்திய நோக்கம். கொஞ்சம் விவரமாகப் பார்ப்போமா?
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். வானம் அவருக்கு சிங்காசனம், பூமி அவருக்குப் பாதபடி இந்த பூமிதான் அவருடைய விசேஷமான சிருஷ்டியாகிய மனுஷன் வாழும்படியாக உருவாக்கப்பட்டது. காரணம் தேவன் தமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்கி தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
பூமியை மனுமக்களுக்கு தேவன் தந்ததற்கு இவற்றையெல்லாம் விட அதிவிசேஷமான ஒரு காரணம் இருந்தது. சிருஷ்டியாகிய மனுஷன் மட்டுமல்ல, சரித்திரத்திலே மனுஷகுமாரனாக மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு இறங்கி வரப்போகிற சிருஷ்டிகரும் தேவனுடைய தற்சொரூபமுமான தேவகுமாரன் இயேசு இந்த பூமியில்தான் பிறப்பார் என்று அவருடைய அநாதி தீர்மானத்தில் இருந்தது. அதுமட்டுமல்ல, இங்குதான் இவர் தேவனுடைய எதிராளியாகிய பிசாசின் தலையை நசுக்கப்போகிரார். தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கின தேவன், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
எதிராளியா? உபத்திரவமா? மரணமா? கொஞ்சம் பின்னே தள்ளி உட்காருங்கள். சொல்கிறேன்.
இதைப் புரிந்துகொள்ள ஆதி என்கிற நிலைக்கு நம்முடைய கவனத்தைத் திருப்பிப் பார்க்கவேண்டும்.
ஆதி என்பது ‘காலம்’ என்பதற்கு முன்னே தேவன் தம்முடைய பாதபடியாகிய பூமியை அஸ்திபாரப்படுத்தின நிலை. அதற்கு அவர் அளவு குறித்து, அதின்மேல் நூல்போட்டு, ஆதாரங்கள் போட்டு, கோடிக்கல்லை வைத்த பொழுது தேவனுடைய சிருஷ்டிப்பாகிய விடியற்காலத்து நட்சத்திரங்கள் (தூதர்கள்) ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்கள்.
இவர்களில் ஒருவன்தான் அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி (லூசிஃபர்). அவன் அழகினால் அவன் இருதயம் மேட்டிமையாயிற்று; அவன் மினுக்கினால் அவன் ஞானத்தைக் கெடுத்தான். அவனில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டது. தன் வியாபாரத்தின் மிகுதியினால், அவன் கொடுமை அதிகரித்து அவன் பாவஞ்செய்தான். அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், தன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் தன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினான். ஆகையால் தேவன் அவனைத் அவருடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த அவனை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு தரையிலே தள்ளிப்போட்டார்;
லூசிஃபர் தேவனுடைய சிம்மாசனமாகிய வானத்திலிருந்து விழுந்தான். அவருடைய பாதபடியாகிய பூமியிலே தரையிலே விழ வெட்டப்பட்டான்!. தான் மட்டுமல்ல, தன்னோடு சேர்த்து தேவனுடைய சிருஷ்டிகளாகிய தூதரில் மூன்றில் ஒரு பங்கு தூதர்களை தன்னுடைய வாலால் சுருட்டித் தள்ளினான். தேவனுக்கு எதிராளியான சாத்தானாகி ஜாதிகளை ஈனப்படுத்தினான்.
விழுந்தபின்னரும் புத்திகெட்டுப்போய், “நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்றும் அவன் தன் இருதயத்தில் சொன்னான்.
ஆனாலும் அவன் குறிப்பிட்ட காலத்திலே அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனான். தேவன் மனுஷனை உண்டாக்கி தன்னுடைய தோட்டமாகிய ஏதேனில் வைத்தபொழுது சாத்தானும் அங்கே இருந்தான். தேவனுடைய விசேஷ படைப்பாக்கிய மனுஷனை அவருக்கு விரோதமாக பாவம் செய்யத் தூண்டி முதல் மனுஷனையே தன் வசமாக்கிக்கொண்டான். அநீதியெல்லாம் பாவம்தான். அவிசுவாசமும் கீழ்படியாமையும் பாவமே. பாவத்தினாலே மனுக்குலத்திற்குள்ளே மரணம் பிரவேசித்தது. கடவுளுடைய உறவைவிட்டு மனுக்குலம் பிரிந்து இருக்கும் நிலையே மரணம். ஆவியில் மரணம் நேரிட்டதின் விளைவாக சரீர மரணமும் பின் தொடர்ந்தது. இந்த மரணத்தின் நிமித்தம் எல்லா மனுஷருடைய ஆத்துமாக்களும் நித்திய / முடிவில்லா மரணத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றன. நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது. அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது. நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது; சமாதானவழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை,
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பூமியில் மனிதனாகப் பிறந்த இயேசு மனுக்குலத்தின் பாவங்கள் யாவையும் தன்மீது ஏற்றுக்கொண்டார். இரட்சகராகிய இவர் உபத்திரவங்களையும், பாடுகளையும், சகித்து நம்மேல் விழுந்த மரணதண்டனையையும் நமக்காக சிலுவையில் சுமந்து தீர்த்தார்.
தேவகுமாரனின் மகத்தான இந்த தியாகச்செயலை விசுவாசித்து கடவுளிடம் மனந்திரும்பி உணர்ந்து வருவோர் யாராயினும் அவர்களை கடவுள் ஏற்றுக்கொள்கிறார். தேவன் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறார். தம்முடைய பிள்ளையாய் ஆக்கிக்கொள்கிறார். தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார். எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். தேவகுமாரனாகிய இயேசு நமக்காக தன்னையே தந்தார்:
நம் பாவமெல்லாம் மன்னிக்க தன் இரத்தம் சிந்தி தம் உயிரைத் தந்தார்
தன் சரீரத்தை புசிக்கவும் தன் இரத்தத்தை பானம் பண்ணவும் தந்தார். அதனாலே நாம் பிழைக்கவும் வாழவும் தன் ஜீவனைத் தந்தார்
நம்மை அனுதினமும் போஷிக்க தம்முடைய சத்திய ஜீவ வார்த்தையைத் தந்தார்
நம்முடைய ஆத்தும தாகம் தீர பரிசுத்த ஆவியானவரைத் தந்தார்
நாம் உபத்திரவங்களையும் பாடுகளையும் சகிக்கவும் சோதனைகளை ஜெயிக்கவும் தன் உதவியையும் பெலனையும் தந்தார்
நம் இருதயம் கலங்காதிருக்கும்படியாக தன்னுடைய சமாதானத்தை தந்தார்
தன் திவ்ய சுபாவத்தில் பங்குள்ளவர்களாக்கினார்
தம் மகிமையில் பங்குள்ளவர்களாக்கினார்
தம் சுதந்திரத்தில் பங்குள்ளவர்களாக்கினார்
தன் நாமத்தைத் / பெயரைத் தந்தார்
தன் நீதியை நமக்குத் தந்தார்
தன் பரிசுத்தத்தைத் தந்தார்
தன் பிதாவை நம்முடைய பிதா என்று அழைக்கும் உரிமை தந்தார்
அருகதை அற்ற நமக்கு தன் கிருபையை தந்தார்
தான் சாதித்த வெற்றியை நமக்குத் தந்தார்
உன்னதத்திலே தம்மோடு உட்காரும்படியாக தம்முடைய சிம்மாசனத்தைத் தந்தார்
தம்மோடு இராஜாக்களாக ஆளுகை செய்யும்படியாக தன்னுடைய இராஜ்ஜியத்தை தந்தார்
விசுவாசிகளாலான தன்னுடைய சரீரத்துக்கு தன்னையே தலையாகத் தந்தார்
தன்னுடைய முழு அன்புக்கும் உரிமையுடையவளான தன்னுடைய சபையாம் மணவாட்டிக்கு தன்னையே மணவாளணாகத் தந்தார்
இன்னும் தருகிறார். இன்றும் தருகிறார். என்ன தரவில்லை? இவையெல்லாம் என்னைத் தம்மைப்போல மாற்றும்படியாகத் தந்தார்.
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
தன்னையும் தன்னுடைய எல்லாவற்றையும் தந்த இந்த நம்முடைய கர்த்தராகிய இயேசுவுக்கு நாம் என்ன தருகிறோம்? காணிக்கை, தசமபாகம், நகை? 5 நிமிடங்கள்?
பொற்கொல்லன் தன்னுடைய முக சாயல் பொன்னிலே தெரியுமாட்டாக அதை புடமிட்டுக்கொண்டே இருப்பானாம். நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து அர்ப்பணிக்கும்போது நாமும் சுத்தப் பொன்னாவோம்.
தந்தானைத் துதிப்போமே!
எபிரேயர் 2:1; ஆதியாகமம் 1:1.; ஏசாயா 66:1; சங்கீதம் 115:16.; ஆதியாகமம் 1:26, 27; ஆதியாகமம் 1:27; எபிரேயர் 2:9; ஆதியாகமம் 3:15; யோபு 38:4-7; எசேக்கியேல் 28:14-18; வெளிப்படுத்தல் 12; ஏசாயா14:13-15; வெளிப்படுத்தல் 20;ரோமர் 3:10-18; ரோமர் 3:23-24; ரோமர் 6:23. -ரோமர் 8:29-30.ரோமர் 8:32ச 1John 3:2
Prakash Agathu aka Bright Augustus
LinkedIn: https://www.linkedin.com/in/brightaugustus
Facebook: https://www.facebook.com/bright.augustus
For more articles and books for Spiritual growth, Christian Life, and Godly lifestyle:
https://www.jesusreigns.in | 90032 86992 | gospel98@gmail.com
Commenti