top of page

முன்னுரை

எல்லாம் இறைவன் செயல்! மெய்யாலுமேயா?

எல்லாம் இறைவன் செயல்! மெய்யாலுமேயா?

சிருஷ்டிகராகிய கடவுள் ஒரு திட்டவட்டமான நித்திய நோக்கமும், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு செயல்திட்டமும் வைத்திருக்கிறார். இவைகளை பைபிள் என்னும் வேதாகமத்திலே பதிவு செய்து கொடுத்திருக்கிறார்; விவிலியம் என்னும் இந்த திருமறை, ஏறக்குறைய 1600 வருடங்களில், கடவுளால் பயன்படுத்தப்பட்ட 40க்கும் அதிகமான, மத்திய கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த மனிதர்களால், தமிழை மூலமாகக் கொண்ட எபிரேயு, அரமேய, மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டு பல புத்தகங்களாக தொகுக்கப்பட்டு, மனுக்குலத்திற்கு கொடுக்கப்பட்ட அவரின் வார்த்தையே. இதில்தான் தேவன் தன் படைப்புகளுக்காகவும், குறிப்பாக பூமிக்காகவும் அதிலுள்ள யாவற்றிற்காகவும், விசேஷமாக மனுக்குலத்துக்காகவும் அவர் சாதிக்க வடித்துவைத்துள்ள விரிவான திட்டமும் விவரிக்கப்பட்டுள்ளன, இதில் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம். நம் அனைவருக்கும் இதில் பங்குண்டு – பலருக்கு அதிர்ஷ்டவசமாக ஆனால் மற்றவர்களுக்கு துரதிர்ஷ்டம்தான்.

கடவுளுடைய மகிமையான நித்தியத்தை அடைவதற்கு நாம் அவரோடு ஒத்துழைத்து செயல்படலாம் அல்லது முடிவில்லாத துன்பத்தை அடைவதற்கு அவருக்கு எதிராகக் கலகம் செய்து கொண்டிருக்கலாம். எப்படியும், இந்த திட்டத்தில் நாம் இருக்கிறோம். தெரிவு செய்யும் உரிமை நம்முடையது, ஏனென்றால் தேவன் நம்மில் ஒவ்வொருவருக்கும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை (சுயாதீன சித்தம்) வழங்குவதன் மூலம் மனிதவர்க்கத்தை கனப்படுத்தியுள்ளார்; நன்மையை தெரிந்தெடுத்தால் நிமிர்ந்து வாழ்வோம். தீமையை தெரிந்தெடுத்தால் வீழ்வோம், சாவோம். கடவுளுக்கு ஆரம்பமுதலே முடிவும் தெரியும் என்பதால், அவருடைய மேன்மையான நோக்கத்தை யார் ஏற்றுக்கொள்வார்கள், கீழ்ப்படிவார்கள் அல்லது அவருடைய இதுவரையும் இனியும் பிசகாத திட்டத்தை யார் நிராகரிப்பார்கள், எதிர்ப்பார்கள் என்பதையும் அவர் அறிவார்.

பேரின்பமிக்க எதிர்காலத்தை சொல்வதுமட்டுமல்லாது வரவிருக்கும் பேரழிவுகளைப் பற்றியும் பைபிள் எச்சரிக்கிறது, இவற்றில் பல ஏற்கனவே தொடங்கிவிட்டன,; விரைவில் இவை ஒரு உச்சக்கட்டத்தை அடையும் என்பதை நினைவில் கொள்க. (இது என் இரண்டாவது புத்தகமான "நிகழ்காலம் பதட்டமாயிருந்தாலும் எதிர்காலம் பரிபூரணம்", Present Tense, Future Perfect என்ற ஆங்கில நூலில் எழுதியுள்ளேன்). இந்த எச்சரிப்பு மணிகளுக்கு நாம் இதுவரை காதுகேளாதவர்கள் போல இருந்துவிட்டோம். இனியாவது விழித்து, கேட்டு உணர்வடைவோமா?

தேவ குமாரனாகிய இயேசு இப்பூமியில் வாழ்ந்த நாட்களிலேயே முன்னுரைத்ததுமல்லாமல் , பூர்வகாலங்களில் தானியேல் எசேக்கியேல் போன்ற தீர்க்கதரிசிகள் மூலமாகவும், கி பி முதலாம் நூற்றாண்டில் தம்முடைய சீஷர்களில் ஒருவரான யோவானுக்குத் தந்த தரிசனங்கள் மூலமாகவும் நடக்கப்போகும் இவை அனைத்தையும் காட்டியுள்ளார்.

இந்த புத்தகம் பைபிளில் உள்ள தானியேல் 9, 12, மத்தேயு 24, மாற்கு 13, லூக்கா 17, 21, 1கொரிந்தியர் 15, 1தெசலோனிக்கேயர் 4, 2பேதுரு 3ஆம் அதிகாரங்கள், வெளிப்படுத்தின விசேஷம் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.

இயேசு கிறிஸ்து மீண்டும் வருகிறார். இதுதான் இனிநடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளில் உச்சகட்டமாக சம்பவிக்கப் போகிறது. இவருடைய வருகையை மையமாகக் கொண்டுதான் மற்ற எல்லா நிகழ்வுகளும் சம்பவிக்கும். அவருடைய வருகைக்கு முன்னும் வருகையின்போதும் அவருடைய வருகைக்குப் பிறகும் நடக்கும் என்று அவர் உரைத்தவைகளையே நாம் இங்கே காணவுள்ளோம்.

அவர் வருகைக்கு முன்னே நடக்க வேண்டியவைகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம், அவர் முன்னுரைத்ததிலிருந்து இதுவரை நிறைவேறினவை ஒருபக்கமும், நாம் வாழும் இக்காலத்திலிருந்து அவர் வரும்வரை நிறைவேரவேண்டியவை அடுத்த பகுதியாகவும் பார்ப்போம்.

முதல் பகுதி, அவர் தீர்க்கதரிசனமாக உரைத்தவைகள் எவ்வளவு மெய்யானவைகள் என்று நமக்கு நிருபணமாக்கும், இதுமட்டுமல்லாது, அவருடைய வருகைக்கு முன்னரும், வருகையிலும், அதற்குப் பின்னரும் சம்பவிக்க வேண்டியவைகள் எவ்வளவு நம்பத்தகுந்தவை என்றும் நமக்கு உறுதிப்படுத்தி விடும். அதாவது, இப்புத்தகத்தை மட்டுமல்ல, வேதாகமத்தையே இதற்குமேல் படிக்கலாமா விட்டுவிடலாமா என்று நீங்கள் தீர்மானித்துவிடலாம்.

இரண்டாம் பகுதியில் இப்பொழுதிருந்து இனி நடக்கவேண்டியவைகளை பார்க்கப் போகிறோம். முதல் பகுதியில் அவர் சொன்னபடி யாவும் சம்பவித்துள்ளதால், இந்தப்பகுதி வாசிப்பவர்களுக்கு ஆவலைத் தூண்டுவது மாத்திரமல்ல, நம் வாழ்வை இனி எப்படி என்றென்றும் வாழும்படியாக அமைத்துக் கொள்ளலாம் என்கிற ஜாக்கிரதையையும் தந்துவிடும்.

கர்த்தராகிய இயேசுவினுடைய வருகையின்போதும் அவருடைய வருகைக்குப் பிறகும் நடக்கும் சம்பவங்கள் இந்த பகுதிகளுக்குப் பிறகு வருபவை.

இந்த புத்தகத்தில் உள்ளவைகள் அனைத்துமே வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட என்னுடைய வார்த்தைகளே. இன்று பிரபலமாக பரவியிருக்கும் பெரும்பாலான கொள்கைகளுக்கு முற்றிலும் வித்தியாசமாகவும், பலவிதத்தில் முரணாகவும் இந்த கருத்துகள் வாசிப்பவர்களுக்கு முதலில் தோன்றினாலும், பழைய, இதுவரை கற்றுக்கொண்ட காரியங்களைக் கொஞ்சம் புறம் ஒதுக்கி, ஒரு புதிய அணுகுமுறையோடு இங்கு வந்தால், நான் சொல்லும் காரியங்களின் உண்மைத்தன்மை விளங்கும்.

இதில் சொல்லப்படுபவை எதுவுமே ஒரு குறிப்பிட்ட நபரையோ, ஜாதியினரையோ, மதத்தினரையோ, நாட்டினரையோ, புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல. யாவரும் சத்தியத்தை அறிந்து, கடவுளின் கடுங்கோபத்துக்கு தப்பித்து, அவரண்டை மனந்திரும்பி வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆழ்ந்த வாஞ்சையே. கிறிஸ்துவின் அன்பு என்னையும் நெருக்கி ஏவுகிறது!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மெய்க்கடவுளின் தற்சுரூபமாகையால் அவர் பொய்சொல்ல ஒரு சாதாரண மனிதன் அல்ல. காணக்கூடாத தேவனை நமக்குக் காண்பிக்க மனிதவர்க்கத்துக்குள் மனுஷனாக கடந்துவந்த தேவ குமாரனாகிய இந்த இயேசுதான் நமக்கு கண்கண்ட தெய்வம். இவரே நமக்காக தன்னையே கொடுத்தவர்.

நமக்குள்ளே வாசம்பண்ணும்படியாக உள்ளத்தில் கடந்துவந்தவர்தான் கடவுளின் ஆவியானவர், இவரே நமக்கு இந்த கடவுளின் வார்த்தைகளை தொடர்ந்து போதிக்கிறவர், அவைகளில் வழிநடத்துகிறவர்; தைரியமும் நடக்கும்படி பெலனும் அருளுகிறவர். இவருடைய உதவியோடுதான் நாம் வேதாகமத்திலுள்ள சத்தியங்களை புரிந்துகொள்ள முடியும். இவரருளும் திறனால்தான் நாம் கிறிஸ்துவின் ஜீவனை இப்பூமியில் வாழ்ந்து காண்பிக்கமுடியும்.

இந்த தேவ ஆவியானவருடைய உதவியோடு முன் செல்வோமா?

bottom of page