இயேசு அரசாளுகிறார்
கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துக்கள்!
உங்களுக்கு எங்கள் கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துக்கள்!
அட, நாங்க அல்லவா உங்களுக்கு Merry Christmas சொல்ல வேணும்? நீங்க எங்களுக்கு சொல்றீங்க… என்று கேட்கத் தோன்றுகிறதா? சரியான கேள்விதான்.
‘இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களின் கடவுள் அல்லவா? அவர்கள்தானே Christmas கொண்டாட வேண்டும்? இயேசு வெளிநாட்டுக் கடவுளாக்கும். அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?’ என்று மனதிலே நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் கொஞ்சம் தொடர்ந்து படிக்கத்தான் வேண்டும்.
“இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்”
- மேய்ப்பார்களிடத்தில் தேவதூதன் சொன்னது, பைபிளில்
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்.
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேசமாமரியா' மக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத் தீர் இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்;
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.
-மகாகவி பாரதியார், பக்திப் பாடல்கள் #77
ஆமாங்க. நம்ம பாரதியார் எழுதினதுதான். இயேசுவைத்தவிர வேறு எவரையுங்குறித்து பாரதியார் இப்படி எழுதியதில்லை. இந்த ஈசனே சமஸ்க்ரிதத்தில் ஈஷ்வர் என்றும் அரபியில் ஈஸா என்றும் ஹிந்தியில் ஈசு என்றும் சொல்லப்படுகிறவர். இவர் பிறந்த அன்று ‘எல்லா ஜனத்துக்குமான நற்செய்தி; என்றுதான் சொல்லப்பட்டதேயல்லாமல், கிறிஸ்தவர்களுக்கான நற்செய்தி என்றல்ல; பூமியிலே சமாதானம் என்று சொல்லப்பட்டதேயல்லாமல் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சமாதானம் என்று சொல்லப்படவே இல்லை. அப்படியானால், இயேசு பிறந்த செய்தி இந்தியர்களுக்கும் தான் நற்செய்தி; ஈசன் பிறந்ததால் இந்தியாவுக்கும்தான் சமாதானம். அதாவது, உங்களுக்கும் எனக்கும்தான்.
ஈசன் பிறந்தது ஒரு வரலாற்று நிகழ்வுதான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. நாம் காசோலையில் கையெழுத்து இடுமுன்னர் தேதி குறிப்பிடும்போதெல்லாம் இவருடைய பிறப்பைத்தான் சாட்சியாக அறிவிக்கிறோம். நம்முடைய வயதை கணக்கிடுவதே இவரின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டுதான் என்றால் மிகையாகாது.
இயேசு பிறந்த இடம் மத்தியக்கிழக்கு ஆசியாவின் இஸ்ரவேல் நாட்டிலுள்ள பெத்லெகேம்தான். அவர் இனம் நம்முடைய நாட்டுக்கு அவருடைய பிறப்புக்கு முன்னரே இடம்பெயர்ந்து வந்த ஆரிய இனமாகிய யூத இனம்தான். அவருடைய நிறம் நம்மில் பலர் போல கோதுமை நிறம்தான். அவர் பேசியது தமிழை தோற்றுமொழியாகக் கொண்ட அரமேயம்தான். அவர் பெரும்பாலும் உடுத்திய உடை விவேகானந்தர் உடுத்தியது போல நீண்ட அங்கிதான்; சில வேளைகளில் ஒரு சிறு இடுப்புத் துண்டுதான். அவர் உண்டது கோதுமையும் வாற்கோதுமையும்தான். அசைவ உணவானாலும் அதிகம் மீன்தான். அவருடைய சீடர்களில் சிலர் மீனவர்தான். அவர்களில் சீமோன் என்ற ஒருவர் கருப்பு நிறத்தவரான கானானியர் (தமிழர்?) தான்.
கிறிஸ்துவின் சீடரான தோமா கிபி முதல் நூற்றாண்டில் சிந்துதேசம் வந்து தெக்கணமாகிய தமிழகத்திலும் (கேரளத்திலும் தமிழ்நாட்டிலும்) ஈசனைக்குறித்த நற்செய்தியை அறிவித்தார். சென்னையிலுள்ள பரங்கிமலையில் வாழ்ந்து சின்னமலையில் கொல்லப்பட்டவர் இந்த தோமாதான். சென்னையின் பிரதான சாலை Mount Road ஆனது இதனால்தான்.
தோமாவின் வருகையின் காலத்தில் தமிழகத்தில் கபாலீசுவரர் கோயில் அமைந்த மயிலையில் வாழ்ந்த திருவள்ளுவரும் கபால ஸ்தலத்தில் மரித்த இந்த ஈசனைக்குறித்துதான் தன்னுடைய பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார். முதல் மூன்று அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவையில் முறையே சிருஷ்டிகராகிய தேவனைக்குறித்தும், தேவ ஆவியானவரைக்குறித்தும், தேவகுமாரனாகிய ஈசனைக்குறித்தும் பாடியுள்ளார். கடவுள் கொள்கையற்ற சமண சுவேதாம்பரரான (வெண்ணிற ஆடை உடுத்திய) வள்ளுவர் ஈசனை அறிந்தபிறகு இவைகளை எழுதியிருக்க வேண்டும். இதோ ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் உங்களுக்காக உரையோடு:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அ என்ற எழுத்திலிருந்து உலகமனைத்துமே (திரித்துவமாக) பகுக்கப்படும் அவரிடத்திலிருந்துதான் துவங்குகிறது. (A α)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்.
பொய் (பாவத்தை) தீர்க்கும்படியாக பொறிவாயில் (சிலுவை ஆயுதம் மூலம்) ஐம்புலன்களையும் கொண்ட உடலை சாகக் கொடுத்தவரின் நீதிக் கொள்கையில் நிற்போர் முடிவில்லா வாழ்வடைவர்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
தண்ணீர் இன்றி உலகமில்லை. அவ்வாறே வானிலிருந்து இறங்கிய அவரன்றி யாருக்குள்ளும் நீதிநெறி குடியிருக்காது.
இயேசு ஏன் பிறந்தார்?
கடவுளின் படைப்பாக்கிய மனுக்குலம் கடவுளுடைய சொல்லை மதிக்காமல், கீழ்ப்படியாமல் எதிர்த்து நிற்கிறோம். அவரை எதிர்த்துக் கொண்ட அவருடைய மற்றொரு படைப்பாக்கிய சாத்தானிடத்தில் அடிமையாக மாட்டிக்கொண்டோம். எனினும் நம்முடைய பாவங்களுக்கான பரிகாரம் நம்முடைய வழியில் தேடுகிறோம்.
கடவுளுடைய புண்ணியமாகிய பாவ மன்னிப்பும் அதனோடு வரும் ஆசீர்வாதங்களும் கிடைக்க நாம் உருவாக்கின தெய்வங்களுக்கு ஆடு, சேவல், ஒட்டகம் பலி செலுத்துகிறோம், தேங்காய், நெய்வேத்தியம், பூசணி, எலுமிச்சை படைக்கிறோம். உடலை வருத்திக்கொள்கிறோம், கோயில் குளம் போகிறோம், காசி, அரேபியா, எருசலேம், புண்ணிய யாத்திரை செல்கிறோம், காவடி, சிலுவை சுமக்கிறோம், கங்கை யோர்தானில் புனித நீராடுகிறோம், உண்டியலில் காணிக்கை போடுகிறோம், சூடம் மெழுகுவர்த்தி ஏற்றுகிறோம், சந்தனம், விபூதி, குங்குமம், ஜெபஎண்ணை பூசுகிறோம், தானதர்மம் பண்ணுகிறோம்.
இவை யாவற்றுக்கும் முடிவான ஒரே தீர்வாக பாவநிவிர்த்தி செய்யும்படியாகத்தான் கடவுளே மனுஷனாக இயேசுவின் வடிவில் வந்து, நமக்காக அவர் இரத்தம் சிந்தி, உயிர் கொடுத்தார். மேற்சொன்ன செயல்களிலே நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக இவர் செய்த இந்த ஒரே செயலின்மீது நம்பிக்கை வைப்பதன்மூலம் பாவமன்னிப்பும், புண்ணியமும் பெற்றுக்கொள்ளலாம். இதுவே கடவுள் வகுத்த வழி.
கடவுள் எந்த அளவு உலகத்தில் அன்புகூர்ந்தார் தெரியுமா? தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை விசுவாசிப்பவன் எவனோ, அவன் முடிவில்லா அழிவுக்குப் போகாமல், நீடூழி வாழ்வடையும்படிக்கு அவரையே தந்தார். -பைபிள்.
கடவுள் வகுத்த இவ்வழியாகிய ஈசனைப் பின்பற்றி, சத்தியமான இவரை ஏற்றுக்கொண்டு, வாழ்வாகிய இவரை அடைந்தவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்ற நல்லுறவுக்குள் வந்துவிடலாம். இவர்கள் வாழ்வில் இயேசு பிறக்கிறார். இவரை நிராகரிக்கிறவர்கள் பாவத்துக்கான தண்டனையாகிய முடிவில்லா வேதனை நிறைந்த எரிநரகத்துக்கு போக தாங்களே தங்களுக்கு தீர்ப்பெழுதிக்கொள்கிறார்கள்.
இயேசுவை விசுவாசித்து அவரை தங்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள் கடவுள் குடிகொள்ளும் கோயில் ஆகிறார்கள். உருவமற்ற கடவுளின் ஆவி தங்களுக்குள் உள்ளதால், கடவுளுக்குப் பிரியமான வாழ்வு வாழும் திறனை தொடர்ந்து பெற்றுக்கொண்டே தங்களுடைய சமுதாயத்தில் அவருக்கு சாட்சிகளாக வாழ்வார்கள்.
ஈசன் நம்முடைய பாவப்பரிகாரத்துக்காக மரித்தார். ஆனால் அவர் தேவகுமாரனாயிற்றே. ஆகையால், மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். ஏறக்குறைய ஐநூறு பேருக்கு தம்மை உயிருள்ளவராகக் காண்பித்தார். நாற்பது நாட்களுக்குப் பிறகு அவர் திரும்பப் பரலோகமேறிப் போனார். போவதற்கு முன் தம்முடையவர்களிடம் “நான் திரும்ப வருவேன், உங்களை என்னோடு இருக்கும்படியாகக் கூட்டிக்கொண்டு போவேன்” என்று வாக்குப்பண்ணிப் போயிருக்கிறார். அதுவரை இந்த நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவியுங்கள் என்றும் சொல்லியுள்ளார்.
இந்த பாக்கியமான நம்பிக்கை உடையவர்களாக உடலில் மரித்தவர்கள் இயேசு வரும் நாளில் மீண்டும் உயிரடைவார்கள். இந்த எதிர்பார்ப்போடு இம்மையில் கஷ்டங்கள் சகித்து உயிர்வாழ்கிறவர்கள் அன்று மறுஉருவமடைந்து அவரோடு பரலோகம் (சொர்க்கம்) செல்லுவார்கள்.
இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாத மற்ற யாவரும் நித்திய வாழ்வை புறக்கணிப்பதாலே, இந்த பூமியில் சம்பிரமாய் வாழ்ந்தாலும், கடவுளற்ற இறுதிநிலைக்குத்தான் போகிறார்கள். நீங்கள் எப்படி?