top of page

இயேசு கிறிஸ்துவில்தான் உங்களுக்கு நற்செய்தி

இயேசு கிறிஸ்துவில்தான் உங்களுக்கு நற்செய்தி

கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு பிறந்திருக்கிறார். இதுவே எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி. (லூக்கா 2:10, 9). இது ஏன் நற்செய்தி? இயேசு தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். அதனால்தான். (மத்தேயு 1:21). எப்படி? கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். பரலோகம் ஏறிச்சென்ற அவர் திரும்ப வருவார். (யோவான் 14:3). அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். (1 கொரி 15:3,4, 23).

பாவங்கள் என்றால் என்ன?: அநீதியெல்லாம் பாவம்தான். நியாயப் பிரமாணத்தை மீறுகிறதே பாவம். கடவுள் வகுத்த நியதியின்படி வாழாமல், அவைகளை நிராகரித்து, நாம் நம் விருப்பப்படி சுயநலமாக வாழ்வோமேயானால், நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள யாவருக்கும், யாவற்றுக்கும் தீமை விளைவிக்கிறவர்களாக வாழ்வோம். கீழே உள்ள மாதிரிப் பட்டியலைப் பாருங்கள்: (யாத் 20:3-17, கலா 5:19-21).

சிருஷ்டிகராகிய கடவுளைத் தவிர வேறு யாரையும் எதையும் தெய்வமாக வணங்குதல், ஒரு விக்கிரகத்தையோ (சொரூபம், சிற்பம், சிலை, அல்லது படம்) மனுஷர், மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், அல்லது வேறு ஒரு சிருஷ்டியையோ அதின் ரூபத்தையோ உண்டாக்கவோ, வணங்கவோ, சேவிக்கவோ செய்தல், கடவுளுடைய பெயரை வீணாகப் வழங்குதல், தந்தை தாயை கனம் (மரியாதை) பண்ணாதிருத்தல், கொலைசெய்தல், (கருக்கலைப்பு செய்தல்), விபசாரம் (வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்) செய்தல், களவு செய்தல், (திருட்டு, கொள்ளை, லஞ்சம்), பொய்யோ பொய் சாட்சியோ சொல்லுதல் (மாய்மாலம் செய்தல், வஞ்சித்தல்), பிறர்பொருளையோ மனைவியையோ அல்லது அவர்களுடைய உடைமைகளையோ இச்சித்தல், பில்லிசூனியம் செய்தல், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள் கொள்ளுதல், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள் பண்ணுதல், பொறாமைகள், வெறிகள், களியாட்டுகள், நன்மை செய்ய அறிந்தும் செய்யாமலிருத்தல் போன்ற இவை யாவும்.

தமது ஜனங்கள் யார்? எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்கள் ஆனோம். நீதிமான் ஒருவனும் இல்லை; ஒருவனாகிலும் இல்லை. ஜாதி, ஜனம், குலம், கோத்திரம், நாடு, இனம், மொழி, நிறம், சமுதாய, பொருளாதார நிலை, பாலினம், மதம், என்ற வித்தியாசங்களே இல்லை. எல்லாரும் கடவுள் படைத்த மக்களே. நாம் யாவரும் அவருடைய எதிராளிகள் தான்.

இரட்சிப்பார்: பாவத்தின் சம்பளம் மரணம். உடலைவிட்டு உயிர் போவது தற்காலிக மரணம். கடவுளை விட்டு என்றென்றுமாய் பிரிவது நிரந்தர நித்திய மரணம். இது ஆவி, ஆத்துமா (ஆழ்மனம்), சரீரம், ஆகிய முழு மனிதனும் இறுதி எரிநரகத்துக்குப் போவதைக் குறிக்கும். ஒருவரும் இந்த கொடுமையான இறுதிநிலைக்குப் போவது கடவுளின் விருப்பம் அல்ல. இந்த முடிவில்லா மரண தண்டனையினின்று மனிதர் யாவரையும் இரட்சிக்கவே (காப்பாற்றவே, தப்புவிக்கவே, விடுவிக்கவே) இயேசு இந்த பூமியில் மனுஷனாகப் பிறந்தார்.

யார் இந்த இயேசு? இவர் சிருஷ்டிகராகிய கடவுளின் தற்சுரூபம். கடவுளே மனுஷர்நடுவில் தன்னைக் காண்பிக்க மனுஷ ரூபத்தில் இயேசுவாக பிறந்தார். மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து மனிதனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், இன்றிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பாலஸ்தீன தேசத்திலுள்ள பெத்லெகேம் என்னும் ஊரில் கன்னிமரியாளுடைய கர்ப்பத்தில் (திருமண உறவுக்கு முன்பே) உற்பவித்துப் பிறந்தார். முப்பத்திமூணரை வருடங்கள் வாழ்ந்து, நன்மை செய்கிறவராக யூதேயா, கலிலேயா சமாரியா எங்கும் சுற்றித் வந்தார். கடவுளுடைய அரசை பறைசாற்றினார். வழி, சத்தியம், ஜீவனாக, நிறைவாழ்வு வாழ்ந்துகாட்டினார்.

ஏன் மரித்தார்? பாவம் செய்கிற யாவரும் சாவார்கள். கடவுள் உரைத்த இத்தீர்ப்பின்படி, எல்லா மனுஷரும் மரிக்கவேண்டியதுதான்; கடவுளற்ற எரிநரகத்துக்கு போக வேண்டியதுதான். ஆனால், அன்பான கடவுளோ ஒருவரும் இப்படிக் கெட்டுப்போவதை விரும்பவில்லை. பாவத்திநிமித்தம் வரும் தண்டனையை தானே ஏற்றுக்கொள்ள முன்வந்தார். தன்னுடைய குமாரனுடைய வடிவிலே வந்த அவர், உலகத்தின் பாவத்தை தாமே சுமந்துதீர்த்தார். பாவப்பரிகாரம் செய்தார்.

ஏன் இரத்தம் சிந்தினார்? கடவுள் ஏற்படுத்தின இந்த இரட்சிப்பின் திட்டம் மனிதன் கடவுளை எதிர்த்துக்கொண்டு திரும்பிய அந்நாளிலிருந்தே அவனுக்கு அறிவிக்கப்பட்டதுதான். கடவுள் தாமே இந்த பூமிக்கு வந்து தன்னுயிர் தரும்வரை, மனுஷன் தன்னுடைய பாவத்துக்காக இரத்தம் சிந்தவேண்டும் என்று தீர்த்தார். ஏனென்றால் மனுஷனுடைய உயிர் இரத்தத்தில் இருக்கிறது. ஆனால், தன்னுடைய இரத்தம் சிந்தினால் மனுஷன் சாகவேண்டும். சிந்தப்படும் இரத்தமும் பாவக்கறைபட்ட இரத்தமாக இருக்குமேயல்லாமல் புனிதமானதாகாது. எனவே, கடவுளே புனிதமான தன்னுடைய இரத்தத்தை முழு மனுக்குலத்திற்காக சிந்தும்வரை, மனுஷன் பின்பற்றும்படியான ஒரு யுக்தியை பரிந்துரைத்தார். ஒரு காளையோ, வெள்ளாட்டுக் கடாவோ, ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியோ தெரிந்துகொண்டு நிரபராதியான அதனுடைய இரத்தத்தை முழுவதும் சிந்தி பலியாக கொடுக்கவேண்டும். அந்த செயல் செய்யும்போது, மனுஷன் தன்னுடைய இருதயத்திலே குத்தப்பட்டு, எனக்காகவேண்டி இந்த கொடுமை நடக்கிறதே என்று துக்கிக்கவேண்டும் அதுமட்டுமல்ல, கடவுள் எனக்காக தாமே வந்து இரத்தம் சிந்துவார் என்றும் விசுவாசிக்க வேண்டியது அவசியம்.

கடவுளின் வாக்குப்படி, நாலாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தேவகுமாரனாகிய இயேசு பூமியிலே வந்து தன்னுடைய தூய்மையான இரத்தத்தை சிந்தினார். இதற்குப் பிறகு, இந்த பலி செலுத்தப்படவேண்டிய அவசியம் இல்லாமற் போனது. இவரை இப்போது ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் இயேசு என்னுடைய பாவங்களுக்காகத்தான் மரித்தார் என்றும் என்னுடைய இடத்திலே மாற்றாளாக தம்முடைய இரத்தம் சிந்தினார் என்றும் விசுவாசிக்கவேண்டியது அவசியம்.

அடக்கம்பண்ணப்பட்டார்: இயேசு மரித்தார் என்பதை உறுதிசெய்ய அவரை ஒரு போர்ச்சேவகன் விலாவிலே ஈட்டி கொண்டு குத்தினான். கடைசிசொட்டு இரத்தமும் தண்ணீரும் வடிந்தது. பின்பு அவருடைய மரித்த உடலை எடுத்து ஒரு கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள். அவர் சிலுவையிலே மயக்கம் அடையவில்லை. மரித்தார்.

பாவங்களை நீக்கினார்: கடவுள் மனுவுருவாகப் பிறப்பார் என்று விசுவாசித்து அவர் பிறந்து வரும்வரை, மிருக பலி செலுத்தினவருடைய பாவங்கள் மூடப்பட்டது. இயேசு வந்து தன்னையே பலியாகக் கொடுத்தபொழுதோ அவர்கள் பாவங்களையும், இவருடைய மரணத்திற்குப்பின் இவரை விசுவாசிக்கிறவர்களுடைய பாவங்களையும் நீக்கினார். நம்முடைய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டதால், நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது. ஆகையால், பாவமன்னிப்பு கோருகிற யாவரையும் இவர் மன்னிக்கிறதற்கு அதிகாரம் இவருக்கு இப்பொழுது உண்டு.

மூன்றாம் நாளில் உயித்தெழுந்தார்: இயேசு தம்மைக்குறித்து “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று சொன்னார். அவர் சொன்னபடியே உயித்தெழுந்ததினாலே, தேவகுமாரன் என்று உறுதியாய் நிரூபிக்கப்பட்டார். மூன்றாம் நாளில் (36 லிருந்து 40 மணிநேரத்துக்குள்ளாக) உயித்தெழுந்ததினாலே அவருடைய உடல் அழிவைக்காணவில்லை. அவரை நம்புகிறவர்களுக்கும் அவர் வாக்குப்படியே நிறைவான வாழ்வை இம்மையிலும், முடிவில்லா வாழ்வை மறுமையிலும் அளிக்கிறார்.

பரமேறிப்போனார்: உயிர்த்தெழுந்தபின் பலநாட்கள் ஐந்நூறு பேருக்குமேலானோருக்கு தன்னை காண்பித்தவர் நாற்பதாவது நாள், பரமேறிச் சென்றார். ஆனால், “உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன். என்னை விசுவாசிக்கிற யாவரும் என்றென்றும் என்னோடு இருக்கும்படியாக நான் வந்து மீண்டும் உங்களை அழைத்துச் செல்வேன்” என்று வாக்குப் பண்ணிச் சென்றிருக்கிறார். அதுவரை கடவுளுடைய ஆவியானவர் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்குத் துணையாய் இருக்கும்படியாய் அவர்களுக்குள் கொடுக்கப்பட்டிருக்கிறார்.

திரும்ப வருவார்: அவர் திரும்ப வரும்போது நடக்கும் என்று அவர் சொன்ன அடையாளங்கள் இக்காலத்தில் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. சீக்கிரம் வருவார். அப்பொழுது, அவரை விசுவாசித்திருந்து மரித்தவர்கள் மீண்டும் உயிரோடு மகிமைபொருந்திய உடலிலே எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் அவருடையவர்கள் யாவரும் மகிமையான மறுவுருவடைவார்கள். இவர்கள் எல்லோரையும் இயேசு தம்மோடு நிரந்தரமாய் வாசம்பண்ணும்படியாக பரலோகம் கூட்டிச்செல்வார்.

(துர்ச்செய்தி: அவரையும் அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்காதவர்கள் கடைசி நாளிலே உயிரோடெழும்பி எரிநரகத்தீர்ப்பு அடைவார்கள்)

வேதாகமம்: இவை யாவும் பொய்யுரையாத கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றன.

இயேசு கிறிஸ்துவில்தான் உங்களுக்கு நற்செய்தி
Topic
The complete Gospel message
Category
Gospel
bottom of page